ஆரோக்கியத்தோடு வாழ துத்திக் கீரை
ஆரோக்கியத்தோடு வாழ துத்திக் கீரை
கீரைகளின் பயன்களை அனைத்து மக்களும் உணரத் தொடங்கிவிட்டனர். காலை நேரங்களில் கீரை கட்டுகளை மக்கள் வாங்கிச் செல்வதை நாம் காண்கிறோம். குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதனால் இதன் மகிமையை சில காலம் மறந்து நோய்களின் உறைவிடமாக தங்களை ஆக்கிக் கொண்டனர் பலர்.ஆரோக்கியத்தை அள்ளித்தரும் குணம் கீரைகளுக்கு அதிகம் உண்டு என்பதை விளக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கீரையை பற்றி அறிந்து வருகிறோம்.
கிராமங்களில் அதிகமாக கிடைக்கும் துத்திக் கீரை மருத்துவ குணம் கொண்டதாகும். இதனை கக்கடி, இக்கசி என்ற பெயர்களில் அழைக்கிறார்கள். இவை இந்தியாவில் உஷ்ண பகுதிகளில் வளர்கிறது. இவற்றில் பால்துத்தி, சிறுதுத்தி, கருந்துத்தி, ஒரிதழ்துத்தி, காட்டுத்துத்தி, கொடிதுத்தி, நாமத்துத்தி, நிலத்துத்தி, பொட்டகத்துத்தி, என பல வகைகள் உள்ளன.
இதன் இலை, பூ, வேர், பட்டை என அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் கொண்டது. மலசிக்கல் உடல் ஆரோக்கியத்திற்கு முதல் கேடாகும். மலச்சிக்கலை நீக்கினால் நூறாண்டு காலம் உயிர் வாழலாம்.. இன்றைய நவீன உணவுகள் எளிதில் ஜீரணமாவதில்லை. மேலும் அவசரமாக உணவை சாப்பிடுவதாலும் மலசிக்கல் உருவாகின்றது. மனச்சிக்கல் இருந்தால் கூடவே மலசிக்கலும் வந்துவிடும். மலசிக்கல் உள்ளவர்கள் துத்திக்கீரையை நன்கு கழுவி, அதனுடன் பாசிபருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலசிக்கல் தீரும்.
- காரமும், புளிப்பும், உணவில் அதிகம் சேர்ப்பதால் சிலருக்கு குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுகள் சீற்றமாகி மூலக்குடலை அடைக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்பட்டு மூலநோயாக மாறுகிறது.
- இவ்வாறு மூல நோயால் அவதிப்படுபவர்கள் துத்திக்கீரையை நீர்விட்டு அலசி சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் பாசிபருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம் இருமுறை மதிய உணவுக்குபின் சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து மூலநோய் படி படியாக குணமாகும்.
- துத்திக்கீரையை நன்கு நீரில் அலசி சிறியதாக நறுக்கி நீரில் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பின் அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து ரசமாக அருந்தி வந்தால் உடல் சூடு தணியும்.
- துத்தி இலையை எடுத்து ஆமணக்கு (விளக்கெண்ணை) தடவி வதக்கி வெப்பக் கட்டிகளின் மீது வைத்து கட்டி வந்தால் கட்டிகள் பழுத்து உடைந்து ஆறும் துத்தியிலையை சாறெடுத்து, பச்சரிசி மாவுடன் சேர்த்து களியாக கிண்டி கட்டிகளின் மேல் பூசி வந்தால் கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.
- துத்தி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து. அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும். இந்த கீரையை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொண்டால் குடல் புண் ஆறும்.
- சரியாக சிறுநீர் பிரியாமல் இருந்தால் சிறுநீரக நோய் வர வாய்ப்புள்ளது. துத்தியிலையை ரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது.
துத்திக்கீரையை கிடைக்கும் காலங்களில் வாங்கி சமைத்து சாப்பிட்டு வந்தால் நீண்டநாள் ஆரோக்கியத்தோடு வாழலாம்.
குறிச்சொற்கள்: